எரிபொருள் நெருக்கடிக்கு உக்ரைன் – ரஷ்ய போரே காரணம்!!

ரஷ்யாவின் டீசல் உள்ளிட்ட எரிபொருள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என உக்ரைன் ஜனாதிபதியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்திய கிழக்கு போர் ஓர் காரணமல்லவெனவும், மாறாக உக்ரைன் – ரஷ்ய போரே காரணம் எனவும் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் முக்கிய பொருளாதார உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் உக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை தமது உத்தியோகப்பூர்வ இராணுவ இலக்காக நிர்ணயித்து அதன்மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்கள், அந்நாட்டின் எரிபொருள் உற்பத்தியைக் குறைத்து, நாடு முழுவதும் எரிபொருட்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலும் இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், வரலாற்றில் முதன்முறையாக டீசலின் விலை அமெரிக்காவில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொளேடிமிர் ஷெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், ரஷ்யா மீது தாக்குதல்களை நடத்துவதற்கு வேறு இலக்குகளை நிர்ணயிக்குமாறு தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

எரிபொருள் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts