Ad Widget

எமது கிராமமே ‘எமக்கு வேண்டும் ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்’

“கேப்பாப்புலவுக்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

“இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில் சூரிபுரம் காட்டுப்பகுதியில் மாதிரிக் கிராமத்தினை உருவாக்கி அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் இதுவரை வாழ்ந்து வருகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு நாம் வாக்களித்தது, எமது பூர்வீக நிலங்கள் விடுக்கப்படும் என்பதாலேயே. எமது பூர்வீக நிலங்கள் முழுமையாக விடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. மாதிரிக் கிராமத்தில் எம்மால் தொடர்ந்து வசிக்க முடியாது. எம்மை மாதிரிக் கிராமத்தில் தொடர்ந்து தங்க வைத்திருப்பது எமது நாட்டுக்குள்ளேயே சிறையில் வாழ்வதற்கு ஒப்பானதாகும்.

எமது கிராமத்துக்கு பஸ் சேவைகள் இல்லை. பிரதான வீதிகள் புனரமைக்கப்படவில்லை. மின்சார வசதிகள் இல்லை. இவை எல்லாம் பொறுத்துக் கொண்டாலும் எமது வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி வரும்போது, கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என மக்கள் கூறினர்.

Related Posts