Ad Widget

எந்தவித போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டோம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

எம்மோடு கலந்துரையாடாத எந்தவித போராட்டத்திலும் நாம் கலந்துகொள்ள மாட்டோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் விடுமுறைகளும் வீணாகிப்போயுள்ளன.

30 ஆண்டுகால யுத்த சூழ்நிலைகளால் தமிழர் பிரதேசங்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு இறுதி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு, பதவி உயர்வுகள், நியமனங்கள் தொடர்பாக காத்திரமான கோரிக்கைகள் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ளதோடு உரியவர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.

தற்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில். பல அடக்குமுறைகளுக்கு உட்பட்டுள்ள தமிழ் சமுகம் சார்ந்த இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை எந்தப்போராட்டங்களிலும் ஈடுபடாது.

ஆகையால் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் இந்நிலைப்பாட்டை எமது உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

அத்தோடு எம்மோடு கலந்துரையாடாத அடிமுடி தெரியாத வேறு நோக்கங்கள் கொண்ட செயற்பாடுகளுக்கு நாம் ஒத்துழைக்க முடியாது.

அண்மையில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புப்பட்டி போராட்டத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts