Ad Widget

எதிலும் குறை கூறுவதனாலேயே அபிவிருத்தியை முன்னெடுக்க முடியவில்லை: வடக்கு முதல்வர்

எதிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளோம் என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமானபோது அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

“கடுமையான போருக்குப் பின்னர் மீண்டெழுந்து வருகின்ற வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டிய இத்தருணத்தில் உங்கள் அனைவரதும் முனைப்புடனான ஈடுபாடுகளும் விரைவான செயற்பாடுகளும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.

எமது அபிவிருத்திக்கு வேண்டிய நிதி மூலங்களை தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பெற்றுக் கொள்ளல், அவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதிகளை முறையாகச் செலவு செய்வதற்கான திட்ட முன்மொழிவுகள் ஆகியவற்றைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகளை நாம் யாவரும் முனைப்புடன் செயற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வேலைகள் துரிதமாக நிறைவுறுத்தப்படாமைக்கான காரணங்களை ஆராய்வது அவசியம். ஆனால் அதே நேரம் அவ் வேலைகளை விரைந்து நிறைவு செய்வதற்கான வழிமுறைகளையுந் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

தொழில்நுட்பவியலாளர்கள் பற்றாக்குறை, அலுவலர்களின் அனுபவமின்மை போன்ற பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டு செல்லாது தேவையேற்படின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் கடமைகளை நிறைவு செய்ய முன்வரலாம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்” என வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Related Posts