Ad Widget

எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது – மீள்குடியேற்றக் குழுவின் தலைவர்

“எங்கள் சொந்த நிலங்களை மீட்கும் வரையில் போராட்டம் ஓயாது. எத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும். வலி. வடக்கு மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தின் இன்றைய இறுதி நாளில் அனைவரும் அணி திரள்வோம்”

maviddapuram-arpaddam

இவ்வாறு அறைகூவல் விடுத்தார் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.

வலி. வடக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 24 கிராம சேவையாளர் பிரிவுகளையும் விடுவிக்குமாறு கோரி வலி. வடக்கு மக்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் முன்பாக இடம்பெறும் இந்தப் போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் எழுச்சியுடன் பங்கெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் இறுதிநாள் இன்றாகும்.

இந்த நிலையில் இன்றைய போராட்டத்துக்கு மக்களை அணிதிரளுமாறு வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அ. குணபாலசிங்கம் அழைப்பு விடுத்துளளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

23 வருடங்களாக சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் நிலங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அபிவிருத்தி என்ற பெயரில் எங்கள் நிலங்கள் இராணுவத் தேவைக்காகவே கையப்படுத்தப்பட்டுள்ளன. அதனையே எதிர்க்கிறோம்.

போர் நடைபெற்ற காலத்தில் எங்கள் நிலங்களுக்கு செல்லவிடுமாறு உங்களை நாம் கேட்கவில்லை. போர் முடிந்துவிட்டது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கின்றீர்கள் அப்படியானால் எங்கள் நிலங்களை யாருக்காகப் பிடித்து வைத்திருக்கின்றீர்கள்.

இலங்கை அரசு உண்மையிலேயே நல்லிணக்கத்தை விரும்புகின்ற அரசாக இருந்தால், எங்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும். எங்களுக்கு எங்களின் வளம் கொழிக்கின்ற நிலமும் கடலும் தான் வேண்டும்.

இதை நாம் முழுதாகப் பெற்றுக் கொள்ளும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என்றார்.

சம்பந்தன் பங்கேற்பு

இன்றயை இறுதி நாள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர் தலைவர் இரா. சம்பந்தனும் இதில் பங்கெடுக்கவுள்ளார்.

மீனவர் சங்கங்கள் ஆதரவு

வடமராட்சி மீனவர் சங்கங்கள், வலி வடக்கு மக்களின் இன்றைய போராட்டத்துக்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.

Related Posts