வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் 100 மில்லியன் ரூபாய் ஊழல் செய்தமை தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை உருவாக்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நேற்று வியாழக்கிழமை (30) தெரிவித்தார்.
உலக வங்கியின் 3500 மில்லியன் ரூபாய் செலவில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வடக்கில் 120 வேலைத்திட்டங்கள், 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வேலைத்திட்டங்களை வடக்கிலுள்ள 5 மாவட்டங்களிலும் மேற்கொண்ட பொறியியலாளர் ஸ்டெயிலாநாதன் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்துவதற்கே இந்த விசாரணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.
இந்த விசாரணைக்குழுவில் கட்டிட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் மற்றும் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த பெண் அதிகாரியொருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு, எதிர்வரும் திங்கட்கிழமை (03) தங்கள் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். மேற்படி ஊழல் நடவடிக்கையுடன் நேரடியாக தொடர்புபட்ட பொறியியலாளர்கள் உள்ளிட்ட சில அலுவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊழல் தொடர்பில் எத்தனை பேர் தொடர்புபட்டுள்ளனர் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரம் ஆளுநரால் தெரிவிக்கப்படவில்லை.
தொடர்புடைய செய்தி