Ad Widget

ஊர்காவற்துறை – காரைநகர் பாதை சேவை இடைநிறுத்தம்!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகு:ம் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாக பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயை தேவைக்கேற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்கு சீரான சேவையை வழங்கவேண்டும். அதை விடுத்து, கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இலவசமாக இடம்பெறும் பாதைச் சேவை இடம்பெறாமையால், தனியார் படகுகளில் பணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளதுடன் , படகுகளில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும் உதிரிப்பாகங்களை அதிக விலைக்கு பெற்று சீர்செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் கவலை தெரிவித்தனர்.

குறித்த காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் பாதை சேவையோ , படகு சேவையோ இடம்பெறாத நிலையில் காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , மீண்டும் ஊர்காவற்துறை செல்லவேண்டும். வெறும் 15 நிமிடங்களில் கடக்க வேண்டிய தூரத்தை சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts