Ad Widget

ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது – அவ்வாறு எதுவுமே யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறவில்லை – பணிப்பாளர் மறுப்பு

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை . விசாரணைகளும் நடைபெறவில்லை”இவ்வாறு யாழ்.போதான வைத்தியசாலை பணிப்பாளர்கள் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்.போதனா வைத்தியசாலையில் 500 க்கும் மேற்பட்ட தாதியர்கள் கடமையாற்றும் புனிதமான இடம். எனவே இங்கு கடமையாற்றுபவர்கள் புனிதமாக கடமையாற்றுகின்றார்கள். நோயாளர்களை கவனத்துடன் பரிவுடனும் கடமையாற்றுகின்றனர்.

அந்த தவறான செய்தியால் வைத்தியசாலை சேவைக்கு இடையூறாக உள்ளது. செய்திகள் வெளிவந்தமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.

இந்த செய்தியால் இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மன சோர்வு ஏற்பட்டு சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

தாதியர்கள் தவறிழைத்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் முதலில் உள்ளக விசாரணைகள் நடைபெற்று இருக்கும். ஆனால் அவை எதுவும் நடைபெறாத நிலையில் அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியாகியமை தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு அந்த செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பிலும் , அதன் பின்னணி தொடர்பிலும் விசாரணை செய்யப்பட வேண்டும்.

அன்மையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளித்தமையில் குறைபாடு என நோயாளியின் உறவினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. அந்த செய்தியினையே இணையத்தளங்கள் , ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்தியினை வெளியிட்டுள்ளன.

இவ்வாறான செய்தியால் கடுமையான மனவுளைச்சலுக்கு உட்பட்டுள்ளனர். பெரும்பாலனவர்கள் பெண் தாதியர்கள் இங்கே பணியாற்றுகின்றனர். இந்த செய்தியால் அவர்களே பெரும்பாலும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதியர்கள் மனவுளைச்சல் காரணமாக சேவையாற்றுவதில் தடைகளை எதிர்கொண்டுள்ளனர். அதனால் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே தாதியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றன. இவ்வாறன செய்தியால் தாதிய சேவைக்கு வர பெண்கள் தயங்குவார்கள் என மேலும் தெரிவித்தார்.

Related Posts