Ad Widget

உரிமையை கோரும் வட, கிழக்கு தலைமைகள் வெள்ளத்தின் போது தலைகாட்டவில்லை!

வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத் தருமாறு கூறிவரும் சம்பந்தனோ, ஹக்கீமோ தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட வரவில்லை எனக் கூறிய இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து, இராணுவத்தினரே அந்த மக்களை தோள்களில் தூக்கி சுமந்து காப்பாற்றியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம் என்பதுடன், அங்குள்ள நீர்நிலைகள் உடைப்பெடுத்தமையின் காரணமாக விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.

எனவே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே பெருமளவிலான இராணுவத்தின் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1400 குடும்பங்கள், அதாவது சுமார் 4900 வரையிலான தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 16 இலக்க ஐ.ஜி.பி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தின் பின்னரான மீட்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 300 இராணுவ வீரர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 8 பிரதேசங்கள் வெள்ளப்பெருக்கினால் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள அதேவேளை, அப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 1500 தனிநபர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீட்பு பணிகளுக்காக 150 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொது நிர்வாக அதிகாரிகள் இதனைப் பொறுப்பேற்கும் வரை நாம் இந் நடவடிக்கைகளில் ஈடுபடுபட்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts