Ad Widget

உயிலங்குளம் வீட்டுத்திட்டத்தில் இருந்த மக்கள் வௌியேற்றம்

முல்லைத்தீவு – துணுக்காய் – உயிலங்குளம் இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் வீடுகள் ஆபத்தான நிலையில் காணப்படுதல் காரணமாக, இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் கிராமத்தில், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தில், தற்போது 20 வரையான குடும்பங்களே வாழ்ந்து வருகின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு, மேற்படி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 50 வீட்டுத்திட்டத்தின் மாதிரிக் கிராமத்தில், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் சொந்தக் காணிகள் இன்றி வாழ்ந்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், என தெரிவு செய்யப்பட்ட 50 வரையான குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

குறித்த குடியிருப்பில், போதிய அடிப்படை வசதிகள் இன்மை, குடிநீர் வசதிகள் இன்மை, மாற்றுத்திறனாளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பு இன்மை, காட்டு யானைகளின் தொல்லை போன்ற காரணங்களால், குறித்த மாதிரி வீட்டுத்திட்டத்தில் இருந்த ஐம்பது வரையான குடும்பங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அங்கிருந்து வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளன.

அத்துடன், தலா பத்து இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் யாவும், உரிய முறையில் அமைக்கப்படாமல் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறு குறித்த வீடுகள் காணப்படுவதால், தாங்கள் வீடுகளில் அசசத்துடன் வாழும் நிலை காணப்படுகின்றது என்றும், உரிய முறையில் வீடுகளை அமைக்காத காரணத்தால் நான்கு வருடங்களுக்குள் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

Related Posts