உயிர் நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது எமது கடமை. அவர்களை நினைவுகூரும் எமது மக்களின் உணர்வுகளை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது. இவ்வாறு வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலை வீரர்களை நினைவு கூருவது அவரவர் சார்ந்த சமூகங்களின் கடமை. இன்றைய மனித நாகரிகத்தின் முக்கியமான ஒரு பண்பாக இது காணப்படுகிறது.
ஆனால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது விடுதலை வீரர்களை நினைவுகூரும் உரிமைக்கு எதிராகத் தெற்கில் கடும் எதிர்ப்பு வெளியிடப்படும் துர்பாக்கிய நிலமை காணப்படுகிறது.
போரில் உயிர் நீத்த தமது பிள்ளைகளை , தாய் தந்தையர் நினைவுகூர்ந்து அழுவதையோ, தமது உடன் பிறப்புக்களை சகோதரங்களை நினைவு கூர்ந்து தேற்றிக்கொள்வதையோ சகித்துக்கொள்ள முடியாத தெற்கின் இழி மனோநிலையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது துயில் கொள்ளும் உள்ளங்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்து கொண்டிருப்பர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.