Ad Widget

உடுவில் மாணவிகள் உண்ணாவிரதம்

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் சிரானி மில்ஸை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் கடந்த 3 ஆம் திகதி சனிக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (06) முதல், உண்ணாவிரதப் போராட்டமாக மாறியுள்ளது.

பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

‘அதிபரை பாடசாலையில் இருந்து விலகிச் செல்லுமாறு பாடசாலையின் இயக்குநர் சபை (ஆளுநர் சபை) அறிவித்துள்ளது’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

எனினும், தாங்கள் அதிபரை நீக்கியமைக்கான காரணம் குறித்து, பேராயரும், கல்லூரியின் தலைவருமான பேரருட் கலாநிதி டீ.எஸ்.தியாகராஜா, விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சிரானி மில்ஸ், 7 ஆம் திகதியன்று 60 வயதைப் பூர்த்தி செய்யவிருப்பதால், அவர் தனது பிறந்த தினத்துடன் ஓய்வுபெறுவார் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில் புதிய அதிபர் நியமிக்கப்பட்டார். எனினும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி மாணவர்களையும், பொதுமக்களையும் குழப்பும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபர் சிரானி மில்ஸை நீக்கிய பாடசாலையின் ஆளுநர் சபை, பாடசாலையில் உப அதிபராக இருந்த திருமதி பற்ரீசியா சுனித்தாவை புதிய அதிபராக நியமித்தது.

புதிய அதிபருக்கான நேர்முகத் தேர்வுக்கு சிரானி மில்ஸ் உள்ளிட்ட நால்வர் அழைக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts