Ad Widget

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!!

உக்ரைனும் மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் மற்றும் மால்டோவாவை இக்கூட்டமைப்பில் சேர்வதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen இது ஒரு வரலாற்று தருணம் எனவும், “ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல நாள்” என்று ட்வீட் செய்துள்ளார். “உங்கள் நாடுகள் எங்கள் ஐரோப்பிய குடும்பத்தின் ஒரு பகுதி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, உக்ரைனின் சுதந்திர நாடாக வரலாற்றில் “மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று” என்று இதனை குறிப்பிட்டுள்ளார்.

“ஐரோப்பாவை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய நடவடிக்கை இது” என்றும் அவர் கூறினார், அத்துடன், ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றிய தலைவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மேற்கத்திய நாடுகளுடன் உக்ரைன் இணைவதற்கும் நெருக்கமாவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யாவை இந்த நடவடிக்கை கோபப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் போது, உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகளை வேட்பாளராக 27 உறுப்பு நாடுகளும் அங்கீகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2 நாள் மாநாடு இன்று ஆரம்பமாகின்றது. இதன்போது, ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளராக விண்ணப்பித்திருக்கும் உக்ரைன் மற்றும் மோல்டோவா ஆகிய நாடுகள் வேட்பாளராக அங்கீகரிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியம், அந்நாட்டை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே நேரடியாக இராணுவ உதவி செய்ய முடியும். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது என்பது எளிதான காரியம் அல்ல. அதற்கான நடைமுறைகள் முடிந்து இறுதிக்கட்டத்தை அடைய பல ஆண்டு காலம் ஆகும்.

உக்ரைன் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி விண்ணப்பித்திருந்தது. இந்த நிலையில், அந்நாட்டுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முதலில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அதேபோல் மோல்டோவா நாட்டுக்கும் இன்று வேட்பாளர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

Related Posts