Ad Widget

ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத்துரோகத்தின் நீட்சியாகவே வரலாற்று குறிப்பேடு வெளியீடு! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய சில அமைப்புக்களே பின்னாட்களில் பாதை மாறி கொள்கை பிறழ்ந்து தமிழ் மக்களின் விடுதலைக்கு விரோதமாக செயற்பட்டார்கள். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்புக்கு வலுவான பங்கிருப்பதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் முக்கிய காரணகர்த்தாவாகத் திகழ்ந்துள்ளமை வரலாறு கூறி நிற்கும் உண்மையாகும்.

தமிழர்கள் தமிழ்த் தேசிய சக்திகளாக அரசியல் ரீதியில் ஐக்கியப்பட்டு பலம்பெற வேண்டிய இவ்வேளையில் மீண்டும் இரத்தக்கறை படிந்த துரோக வரலாற்றை மீட்டுப்பார்க்கும் துர்ப்பாக்கிய நிலையை அதே ஈ.பி.ஆர்.எல்.எவ். தான் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 03.02.2019 அன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அவர்களின் கட்சி பிராந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட வரலாற்று குறிப்பேடு எனும் ஆவணத் தொகுப்பானது ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் தமிழினத் துரோகத்தின் நீட்சியாகவே அமைந்துள்ளது.

தமிழர்களின் சுதந்திர வாழ்வினை இலட்சியமாக வரித்துக்கொண்டு தம்மையே ஈகம் செய்து களத்திலே போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அதே இலட்சியத்தின் வழி நின்று மேற்கொண்ட தமிழ்த் தேசிய விரோதத்திற்கெதிரான நகர்வுகள் அனைத்தும் தமிழ்த்தேசிய நலன்சார்ந்ததாகவே அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆதரவானது இறுதிவரை வலுவான நிலையில் தொடர்ந்தமை அதனையே கட்டியம் கூறி நிற்பதோடு மட்டும் அல்லாமல் தமிழீழ விடுதலையை நோக்கிய போராட்டம் மக்கள் போராட்டமாக உலகளாவிய ரீதியில் எழுச்சி பெற்றதை யாவரும் அறிந்ததே.

ஆயுதப்போராட்டத்தில் உச்சம் பெற்று இராணுவச்சமநிலையில் மேலோங்கியிருந்த போதிலும் அனைத்துலக போக்கிற்கு ஏற்றவாறு மக்களின் ஜனநாயக பங்கேற்பின் அடித்தளத்தில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழீழத் தேசியத் தலைமை ஏற்படுத்தியிருந்தது. அதில் புளொட், ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளை தவிர்த்து ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ரெலோ போன்றவற்றையும் இணைத்தே உருவாக்கப்பட்டிருந்தது.

கொள்கைபிறழ்ந்து பின்னின்று இயக்கிய சக்திகளின் நலன்களுக்காக சொந்த இனத்துக்கே எதிராக செயற்பட்ட துரோக வரலாற்றில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கும் அதி முக்கிய இடமுண்டு. அவ்வாறு இருந்தும் அவர்களை மன்னித்து அரசியல் நீரோட்டத்தில் இணைத்து மக்கள் பிரதிநிதிகளாக்கியிருந்தமை தமிழீழத் தேசியத் தலைமையின் தமிழினத்தின் விடுதலையை நோக்கிய அதியுச்ச கரிசனையின் வெளிப்பாடாகும்.

இந்நிலையில் எவரையோ திருப்திப்படுத்தவும் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் வரலாற்று குறிப்பேடு என்ற ஆவணத்தொகுப்பை வெளியிட்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் செயலை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் இச்சதியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை ஒரு கருவியாக கபடத்தனமான முறையில் பயன்படுத்தியுள்ளமை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஆவணத்தொகுப்பு தொடர்பாக வெளியிட்டுள்ள ஊடக மறுப்பறிக்கை இவர்களை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழின விரோத நிலைப்பாட்டின் பின்னணியில் ஒரு வலுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் தமிழ்த்தேசிய தளத்தில் கொள்கை பற்றுறுதியுடன் பயணிக்கும் சக்திகளை ஒருங்கிணைத்து வலுவான ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்க தாயக, புலம்பெயர் தளங்களில் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் இந்த செயற்பாடானது அதற்கு எதிரானதாகவே அமைந்துள்ளது.

ஆகவே, இவ்வாறான ஐக்கிய முன்னணியை உருவாக்கும் வகையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்து செயற்பட்டுவரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இவ்விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவினை எடுக்க வேண்டிய காலசூழலிற்குள் தள்ளப்பட்டுள்ளார் . தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் உன்னத பயணத்தில் தமிழினத்தின் நலனை மட்டுமே முன்னுறுத்திய அடிப்படையில் கொள்கை சார்ந்தவர்கள் மட்டுமே இருக்க முடியும் என்பதனை பொறுப்புணர்வுடன் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளோம்

அறிக்கையினை பார்வையிடுவதற்கு

Related Posts