Ad Widget

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை!

கடந்த 23ம் திகதி முதல் தங்களது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையினை மனிதாபிமான முறையில் பரிசீலித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கூடிய நடவடிக்கையினை எடுத்து உதவுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், இந்தியாவுக்கு சுற்றுலா விஸாவில் சென்றிருந்த சமயம் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் இருவர் தங்களது விடுதலையைக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு, தற்போது அங்குள்ள அதிகாரிகளின் வாக்குறுதிகளின் அடிப்படையில் அதனைக் கைவிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அந்த வகையில், தங்களை விடுவித்து, தங்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரி தற்போது என். பிரபாகரன், எஸ். சுதர்சன், பி. கோபிநாத், கே. தயாகரன், யூ. குருவிந்தன், ஜே. தர்சன், கே. சத்தியசீலன், எஸ். ரொபின் பிரசாத், எஸ். காந்தரூபன், என். குணசீலன், ஆர். யோககுமார், அருளின்பத்தேவர் அகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என அறிய முடிகின்றது.

இந்த நிலையில் இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து, இவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவுமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளிவிவகார அமைச்சருக்கு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts