Ad Widget

ஈபிடிபி கட்சியால் அரசியல் பழிவாங்கப்படும் அப்பாவித் தமிழ் மக்கள்!

வடமாகாணத்தில் போரினால் ஏற்பட்ட காயங்களை சுமந்தபடி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும், மன அழுத்தத்துக்கு மத்தியிலும், வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு மேலும் பல அழுத்தங்களை அரச ஆதரவு கட்சியான ஈ.பி.டி.பி கொடுத்து வருவதாக வட மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ச.சுகிர்தன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

sugirthan-tna

வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது,

ஈ.பி.டி.பியின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிராமம் தோறும் அரசு மேற்கொண்டு வரும் கிராம அபிவிருத்திக்கான ஒரு மில்லியன் செயற்திட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் கைவிடப்பட்டுள்ளார்கள்.

ஈ.பி.டி.பியின் பிரதேச அமைப்பாளர்கள் நேரடியாகவே அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு கட்டளையிட்டு தனது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது தங்களின் ஆதரவாளர்களுக்கும் தங்களால் சிபார்சு செய்பவர்களுக்கும் மட்டுமே உதவி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இச் செயற்படனது மீண்டும் ஈ.பி.டி.பியின் பக்கச் சார்பு நடவடிக்கையினை வெளிச்சம் போட்டு கட்டியுள்ளது. வீதிக்கு வீதி ஏழைகளின் தோழன், மக்களின் விடிவெள்ளி என அரசாங்கத்தின் பணத்தில் பதாகைகளையும், சுவரொட்டிகளையும் வைத்து அரசியல் நடத்தும் மக்களின் ஆதரவற்ற அரசியல் வாதிகளின் முகத்திரை இந்த நடவடிக்கையின் மூலம் கிழிக்கப்பட்டுள்ளது.

ஒரு மக்கள் பிரதிநிதியின் பார்வையில் அனைத்து மக்களும் ஒரே மாதிரி தான் பார்க்கப்படவேண்டும். அவ்வாறு பார்க்கப்படவில்லை என்றால் அவர்கள் சுயநல அரசியல்வாதிகள் ஆவர்கள்.

தமிழ் தேசிய கூடமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி தோல்வி வெறுப்பினால் சேறு பூசி வரும் ஈ.பி.டி.பியினர் தங்களின் செயற்பாட்டை திரும்பிப் பார்த்து வெட்கப்படவேண்டும்.

தமிழ் மக்கள் ஒரு போதும் சலுகைக்கு விலை போக மாட்டார்கள் உரிமைக்காகவே போராடுகிறார்கள். மக்கள் பணத்தில் தங்கள் சுயநலங்களுக்காகவும், தங்களைச் சார்ந்தவர்களின் சுயநலத்திற்காகவும், அரசியலை நடத்துபவர்களின் முகத்திரைகள் எதிர்வரும் காலங்களில் மக்களின் வாக்குகளால் கிழிக்கப்படும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts