Ad Widget

இலங்கை ஊடாக சென்ற இந்தியர்கள் ஐஎஸ்சில் இணைந்த விவகாரம்: ஒருவர் கைது

இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 இளம் பெண்கள் உட்பட 21 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இவர்கள் இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நாடுகளுக்கு சென்றதாகவும், அங்கு அவர்கள் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த டாக்டர் உட்பட சில இளம் பெண்களை மதம் மாற்றி அழைத்து சென்றதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக கேரள பொலிசார், மத்திய உளவுத்துறை, தேசிய புலனாய்வு துறை ஆகிய அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாயமான காசர்கோட்டை சேர்ந்த அப்துல்ரஷித் அப்துல்லா என்பவருக்கு பீகாரை சேர்ந்த யாஸ்மின் அகமது (29), என்ற இளம்பெண்ணுடன் தொடர்பு இருந்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து காசர்கோடு மாவட்டம் காஞ்சங்காடு டிஎஸ்பி சுனில்பாபு தலைமையிலான பொலிசார் பீகார் விரைந்தனர். பின்னர் மத்திய உளவுத்துறை உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையை அடுத்து யாஸ்மின் அகமதுவை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

யாஸ்மின் அகமதுடன் அவரது 4 வயது மகளும் இருந்தார். இருவரையும் பொலிசார் நேற்று காசர்கோட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் இரகசிய இடத்தில் வைத்து பொலிசார் அவரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். அப்போது அப்துல்ரஷித் உட்பட பலருக்கு சிரியா செல்ல இவர் உதவி செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து பொலிசார் யாஸ்மின் அகமதுவிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வௌியிட்டுள்ளது.

Related Posts