Ad Widget

இலங்கை அகதி முகாமில் மர்ம கும்பல் தாக்குதல்

புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை ஈழத்து தமிழர் அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகாமில் மர்ம நபர்கள் அரிவாளுடன் உள்ளே நுழைந்து முகாம் தலைவர் கமலநாதன் உள்ளிட்ட 5 பேரை தாக்கியுள்ளனர். இதில் 5 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக முகாமில் நள்ளிரவில் மர்ம நபர்கள் முகாமிற்குள் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து முகாமில் உள்ளவர்களை தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்தும் நடந்து வருவதாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் பொலிஸார் முகாமிற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை என்று முகாமில் உள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை கண்டித்தும் முகாமிற்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க கோரியும் பொலிஸார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்ய வலியுறுத்தியும் முகாமில் 200க்கும் அதிகமான இலங்கை அகதிகள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடாத்தினர், இதற்கு உடன்பட்டதினை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

Related Posts