இலங்கைக்கு கிழக்கே தளம்பல் நீடிக்கிறது; பல பகுதிகளில் 100 மி.மீ. மழை

இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்துள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொகுதியின் தாக்கம் காரணமாக இன்றையதினம் (21) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், வட மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts