Ad Widget

இறந்த தமிழர்களே நினைவுகூரப்படுகின்றனர்: இராணுவ வீரர்களும் நினைவுகூரப்படுவர்!

யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைவுகூரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் ஊடகங்களில் செய்தி வெளியிடும்போது அவை திரிபுபடுத்தப்பட்டே வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் இணைந்திருப்பதால் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்காது என்ற நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்வரும் 19ம் திகதி இராணுவ வீரர்கள் நினைவுகூரப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, எவன்காட் சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற சிலர் தனக்கு மாதாந்தம் 20 மில்லியன் லஞ்சம் வழங்க முன்வந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவ்வாறு லஞ்சம் பெறும் நபர்களின் மாதாந்த வருமானம் 450 மில்லியன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யார் லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, லஞ்சம் வாங்க மறுத்ததால் தனது மகன் யுவதி ஒருவரை கடத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாக ராஜித பதில் அளித்தார்.

தனது நண்பர் ஒருவர் மூலம் லஞ்சம் வழங்க முயன்றதாகவும் நண்பர் என்பதால் பெயர் கூற முடியாது என்றும் ஆனால் ஆதாரத்திற்கான குரல் பதிவு உள்ளதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திருடர்களை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அளித்த வாக்குறுதிபடி நல்லாட்சி அரசாங்கம் அதனை செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இன்று ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக முறைப்பாடு செய்யும் உதய கம்மன்பிலவிற்கு கடந்த ஆட்சியில் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யவேனும் துணிவு, முதுகெலும்பு இருக்கவில்லை என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Related Posts