Ad Widget

இரும்புக்கம்பியால் கால்கள் கட்டப்பட்டு கொலை செய்து புதைக்கப்பட்ட மனித எச்சம் மீட்பு

கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் வகையில் மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் சதோச வளாகத்தில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 112ஆவது நாளாக நேற்று வியாழக்கிழமை சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை வெளியிடப்பட்ட பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் நேற்றைய தினம் மனித எச்சம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. நேற்று மதியமளவில் இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு வித்தியாசமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை நாள்களும் மனிதப் புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டன.மன்னார் மனிதப் புதைகுழியில் காணப்படும் மனித எச்சங்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமற்போன உறவினர்கள் அச்சம் தெரிவித்திருத்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தொடர்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடைய பொருள்களும் மீட்க்கப்பட்டு வருகின்றன.

இதுவரை மன்னார் மனித புதைகுழியில் இருந்து 266 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 260 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன..

Related Posts