Ad Widget

இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான குறித்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் இந்த கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக சென்றுள்ள அந்த பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கை, மகாவலி அபிவிருத்தி திட்டமூடாக மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் பௌத்த மயமாக்கல்கள், வனவள பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாக காணிகள் அபகரிக்கப்பட்டு தமிழ் மக்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளது.

மேலும் ஜெனீவா சென்றுள்ள தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதன், இதனைத்தொடர்ந்து பக்க நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளதோடு, எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் பிரதான கூட்டத்தொடரிலும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts