இந்திய மீனவர்களை தடுத்தல் சட்டமூலம்:திருத்தங்களுடன் முன்னெடுக்க அங்கிகாரம்

வடபகுதிக் கடலில் இந்திய மீனவர்கள் ஊடுருவி மீன்பிடிப்பதைத் தடுப்பது தொடர்பான தனிநபர் சட்டமூலத்தை, திருத்தங்களுடன் முன்னெடுப்பதற்கு மாகாண சபைகள் அங்கிகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இந்த தனிநபர் சட்டமூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் 2016 பெப்ரவரி 10ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தனிநபர் பிரேரணை குறித்து சபைக்கு அறிவிக்கும் போதே, மேற்கண்ட சட்டமூலம் தொடர்பில் சபாநாயகர் அறிவித்தார்.

இந்தச் சட்டமூலமானது, சகல மாகாண சபைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதோடு சகல மாகாண சபைகளினதும் கருத்துக்கள், நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டன.

இதன்படி கிழக்கு, மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாண சபைகள், இந்தச் சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. எனினும், வடமேல் மற்றும் வடமாகாண சபைகள், திருத்தங்களுடன் இதற்கு உடன்பட்டுள்ளன என்றார்.

Related Posts