Ad Widget

இந்திய மீனவர்களின் அத்துமிறல் தொடர்கின்றது

jail-arrest-crimeஅனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளடன், இவர்களிடமிருந்து 8 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை கரையோர காவல் படையினரும் கடற்படையினரும் இணைந்து மேற்படி இந்திய மீனவர்கள் 30 பேரையும் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

எட்டு ரோலர் படகுகளில் வந்த இந்தியாவின் ஜனதாப் பட்டிணத்தையும் கோட்டைப் பட்டிணத்தையும் சேர்ந்த மீனவர்கள் 30 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேரும் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை முல்லைத்திவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து 15 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 110 பேரை கைது செய்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு படகுகளுடன் நேற்று அழைத்து செல்லப்பட்டனர்.

மீனவர்கள் மீதான விசாரணை முடிவடைந்ததும் திருகோணமலை துறைமுக பொலிசாரிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Related Posts