யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரை பகுதியில் இந்திய மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை கடற்படையின் ராட்சத ரோந்துக் கப்பலானது தமிழ்நாடு மீனவர்களது படகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழக மீனவர்களது படகில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையிலேயே குறித்த நபர் தற்போது யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராமேஸ்வரத்தை சேர்ந்த மாரிசாமி எனும் மீனவரின் சடலத்தையே நேற்று இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்த நிலையில் கடற்படை முகாம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று எட்டு மீனவர்கள் கஞ்சா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகின. எனினும், பின்னர் அத்தகவல்களை கடற்படையினர் மறுத்திருந்தனர். அத்தோடு அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடியில் ஈடுபட்டமையால்தான் எட்டு மீனவர்களையும் கைது செய்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
குறித்த எட்டு மீனவர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர். அதில் இரு மீனவர்கள் தலையில் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.