Ad Widget

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் கதி இன்னும் தெரியவில்லை

இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம் செய்ததாகக் கூறப்படுகின்ற 52 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை.

இதனால் அவர்களின் உறவினர்கள் அவர்கள் இருக்குமிடத்தை அறிவதற்காக அலைமோதிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையிலும் இந்தியாவிலும் அப்போது செயற்பட்டு வந்த முகவர்களின் உதவியுடன் இந்தப் பயணத்தை மேற்கொள்ளத் துணிந்திருந்த போதே, 52 பேர் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆபத்து மிக்க அதேநேரம் பின்னர் தடைசெய்யப்பட்ட இந்த படகுப் பயணத்திற்கு, பயணி ஒருவருக்கு இலங்கைப் பணம் 25 லட்சம் ரூபா கட்டணமாகக் கேட்கப்பட்டதாகவும், முற்பணமாக ஒரு லட்சம் ரூபா செலுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும், அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்த பின்னர் மிகுதி பணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் நிபந்தனை விதித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் 52 பேருடன் புறப்பட்டுச் சென்ற படகுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் போனதையடுத்து, இலங்கையில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த முகவர் தலைமறைவாகியிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.

அதேநேரம் இந்தியாவில் இருந்து செயற்பட்ட முகவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் காணாமல் போன படகும், அதில் இருந்தவர்களும் எங்கு சென்றார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல், அவர்களின் குடும்ப உறவினர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Related Posts