Ad Widget

ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பது பாரதூரமானது – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

பெருபான்மை அரசால் நியமிக்கப்பட்டுள்ள வடக்கு ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன் பாரதூரமான விடயம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 754 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டோரின் உறவினர்கள் நேற்று (வியாழக்கிழமை) ஊடக சந்திப்பை மேற்கொண்டனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கபட்ட உறவுகள் வடக்கு ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பெருபான்மை அரசால் நியமிக்கப்படும் ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன் பாரதூரமானது.

இங்கிருந்து பலர் ஜெனிவா சென்றுள்ள நிலையில் ஆளுநரிடம் மகஜரை கொடுக்கவேண்டிய தேவை என்ன? இவர்கள் போராட்டங்களை செய்யும்போது மாத்திரம் சர்வதேசமே தீர்வை தரவேண்டும் என்று சொல்லிவிட்டு மகஜர்களை ஆளுநரிடமும், மாவட்ட செயலகங்களிலும் வழங்குகின்றனர். ஆனால் நாம் இரண்டு வருடங்களாக எமது நிலைப்பாட்டை மாற்றாது வெளிநாடு தான் எமக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

இன்றுடன் 754 நாட்களாக நாம் தொடர்ந்து போராடி வருகின்றோம். போராட்டத்தில் ஒருநாள் கூட கலந்துகொள்ளாத இவர்கள் தெருவோரத்தில் இருப்பதாக பொய் கூறுகின்றார்கள். எமது போராட்டத்தை உதாசினபடுத்த வேண்டாம் என்பதை அவர்களிடம் கேட்டு கொள்கின்றோம். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பாக ஜ.நா மனித உரிமை அமர்வில் இதுவரை பெரிதாக பேசப்படவில்லை. எனினும் இனிவரும் அமர்வுகளில் அந்த விடயம் முக்கியம் பெறும் என எதிர்பார்கின்றோம்” என்று தெரிவித்தனர்.

Related Posts