நல்லூர் ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. ஆலயத்திற்குள் மட்டும் தான் சப்பாத்துடன் செல்லக்கூடாது என அவர் அறிந்திருந்தார் என்று யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன தெரிவித்தார்.
இருப்பினும், நல்லூர் ஆலயத்திற்குள் குட்டைப் பாவாடையுடன் செல்பவர்களைக் கவனிக்காமல், மேர்வின் சில்வா ஆலய வளாகத்தில் சப்பாத்துக்களுடன் சென்றிருந்ததினைக் கவனித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நல்லூருக்கு விஜயம் செய்த மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா, சப்பாத்துடன் ஆலய வாயில் வரையில் சென்று சுவாமி தரிசனம் செய்தமை தொடர்பில் பத்திரிகைகளில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலம் கருத்து தெரிவித்த அவர், ‘ஆலய வளாகத்திற்குள் சப்பாத்துடன் செல்லக்கூடாது என்று அமைச்சர் மேர்வின் சில்வா உண்மையில் அறிந்திருக்கவில்லை. ஆலயத்திற்குள் மட்டும் தான் செல்லக்கூடாது என அவர் அறிந்திருந்தார்.
ஆனால், நல்லூர் ஆலய உற்சவத்தில் ஆலய வளாகத்திலும் காலணிகளுடன் செல்லக்கூடாது என்ற நடைமுறை இருக்கின்றது. சப்பாத்துக்களுடன் மேர்வின் சில்வாவினைக் கண்டதும், ஓடிச் சென்று இது தொடர்பில் அவருக்கு விளக்கினேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.
ஆனால், இவ்விடயத்தினைப் பெரிதுபடுத்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தும் ஊடகங்கள் ஒன்றினை மட்டும் கவனிக்கவில்லை. நல்லூர் ஆலயத்திற்கு கலாசார உடையணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் குட்டைப் பாவடைகளுடன் பெண்கள் செல்கின்றனர். இதனை நான் அவதானித்துள்ளேன்.
மேர்வின் சப்பாத்துப் போட்டுச் செல்வதினை அவதானித்த ஊடகங்கள் குட்டைப் பாவாடையும் அவதானிக்க வேண்டும்’ என்று மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
மேர்வின் நல்லூரில் வழிபாடு, ஆலய விதியை மீறினார் என குற்றச்சாட்டு!