Ad Widget

ஆயுள் தண்டனைக் கைதியான சரவணபவன் உரிமையாளர் மரணம்!

சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவணபவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது.

இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத் திருமணம் செய்தால் மேலும் வளர்ச்சியடையலாம் என்று ஜோதிடர்கள் கூறியதையடுத்து ஜீவஜோதியை மூன்றாவதாகத் திருமணம் செய்ய முற்பட்டார் ராஜகோபால். இந்நிலையில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் 2001ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சாந்தகுமாரைக் கடத்தி சென்று கொலை செய்தார்.

இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜூலை 7ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடையும் படி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,
அவரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் உடல்நிலை காரணமாக அவர் ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து உடல்நிலை மோசமானதாலும் ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்பதாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வேண்டி அவரது மகன் சரவணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் ஜூலை 16ஆம் தேதி அனுமதி கிடைத்தது.

இதையடுத்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று (ஜூலை 18) சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 72 வயதான ராஜகோபால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர். இரண்டு முறை மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Posts