Ad Widget

“ஆதரவும் எதிர்ப்பும் நியாயமானது” :டேனியல் வசந்தன் (சாம்)

‘கடந்த 2009 ஆம் சிரானி மில்ஸை நீக்கும் போது, அவர் பக்கம் நியாயம் இருந்தமையால் அவர் சார்பாக போராட்டம் செய்தேன். ஆனால், தற்போது அவருக்கு 60 வயதாகின்றமையால்> அவர் ஓய்வுபெற வேண்டும் என்ற நியாயத்தின் அடிப்படையில் அவருக்கு எதிராக செயற்படுகின்றேன்’ என உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் டேனியல் வசந்தன் (சாம்) தெரிவித்தார்.

கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்திருக்கும் ஆசிரியர் சாமின் வீட்டின் மீது, ஞாயிற்றுக்கிழமை (11) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து, அவர் தொடர்ந்து கூறியதாவது,

“தென்னிந்திய திருச்சபையால், கடந்த முறை சிரானி மில்ஸ் நீக்கப்படும் போது, அவருக்கு ஆதரவாக நான் போரடினேன். ஏனெனில், அப்போது அவர் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால் தற்போது, அவருக்கு 60 வயதாகி சட்டத்தின்படி நீக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் சார்பாக முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்.

இதனாலேயே எனது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளுவதற்கு முன்னர், மாலை வேளையில் அப்பகுதியில் பச்சைக் நிறத்திலான முச்சக்கரவண்டியொன்று நின்றது. அந்த முச்சக்கரவண்டி, புதிய அதிபரின் வீட்டுக்கும் சென்றுள்ளதுடன், அவரது வீட்டின் கதவும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சிலரது தூண்டுதலின் பேரில் சில மாணவிகளைக் கொண்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளமை கண்டித்தக்கது. 18 வயதுக்கு குறைந்த மாணவிகளை, வீதியில் இரவு பகலாக போராட்டம் செய்ய வைத்தமைக்காக, சிரானி மில்ஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவரது ஆதரவுடனேயே இந்தப் போராட்டம், நடைபெற்றது.

இந்தப் போராட்டம், அரசியல் ரீதியில் சென்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன், இதில் தலையிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார் என்று கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலையிட வேண்டும்’ என்றும் கோருகின்றனர். உண்மையில் சுமந்திரன் தலையிடவில்லை. அவர் பேராயருடைய ஆலோசகர் மாத்திரமே. அது அவருடைய பதவி. இதில் அரசியல் இல்லை” என்று, ஆசிரியர் சாம், மேலும் கூறினார்.

Related Posts