Ad Widget

ஆட்சியாளர்களின் நடிப்பால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை: சுதந்திர பெண்கள் அமைப்பு

ஆட்சியாளர்கள் அரங்கேற்றிவரும் நாடகங்கள், வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லையென தென்னிலங்கையைச் சேர்ந்த சுதந்திர பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் திருகோணமலையில் கடந்த 25 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) சுதந்திர பெண்கள் அமைப்பினர் இணைந்து தமது ஆதரவை தெரிவித்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவ் அமைப்பினைச் சேர்ந்த ஹேமமாலி அபேரத்ன மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”தமது உறவுகளை இழந்து பல்வேறு துன்பங்களுக்கு முகங்கெடுக்கும் இம் மக்களின் பிரச்சினைகளை முழு இலங்கையர்களினதும் பிரச்சினையாகவே நாம் கருதுகின்றோம்.

காணாமல் போன தமது உறவினர்களுக்காகவும், தடுப்பிலுள்ள அரசியல் கைதிகளுக்காகவும், காணி மீட்புக்காகவும் இம் மக்கள் நடத்தும் போராட்டம் சகல இலங்கையர்களதும் போராட்டமாக அமையுமென நாம் நம்புகிறோம். இதில் இன, மத, மொழி பேதம் கிடையாது.

இதனை நாம் அரசியல் ரீதியான பிரச்சினையாகவே கருதவேண்டியுள்ளது. காரணம் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் இம் மக்களுக்கு ஆட்சியாளர்கள் இதுவரை உரிய தீர்வை வழங்கவில்லை.

ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிச் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் இவ்விடயத்தில் நாடகங்களையே அரங்கேற்றி வருகின்றனர். இவர்களது நடிப்பால் இம் மக்களுக்கு எவ்வித தீர்வும் கிட்டப்போவதில்லை. அதனால் நாம் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி கொழும்பு உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு முழு ஆதரவை வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.

Related Posts