சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு சென்றிருந்த 3 பெண்கள் உட்பட 24 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
விசேட விமானம் மூலம் இன்று (புதன்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த இவர்களிடம், குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மலேசியா சென்றிருந்த இவர்கள், சுமார் ஒரு வார காலத்தின் பின்னர் அங்கிருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர்.
அதன் பின்னர் கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி அவுஸ்ரேலிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 24 இலங்கையர்களும் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் இருக்கமான சட்டங்களை கொண்டுள்ள அவுஸ்ரேலியா, தமது நாட்டுக்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர் என எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.