மத்திய மாகாண அரசுகள் இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நேற்றய தினம் (26) பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் முன்மொழியப்பட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் இணைந்து மாகாண அரசு மக்களின் வாழ்வாதாரத்தையும் அபிவிருத்தியையும் மேம்படுத்தும் பொருட்டு திட்டங்களை வகுத்து முன்னெடுக்க வேண்டும்.
இதனூடாகவே மக்களுக்கான முன்னேற்றங்களையும் அபிவிருத்திகளையும் உரிய காலத்தில் முன்னெடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
இதனிடையே வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இன்றைய மீளாய்வு கூட்டம் தொடர்பாக ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் குறித்த இக் கூட்டத்தைப் பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தமது முகவரியிட்டு கடிதமொன்றை எழுதியுள்ளதாக தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கடிதத்தையும் சபையில் சமர்ப்பித்ததுடன் இதுவிடயம் தொடர்பில் கவலையையும் விசனத்தையும் தெரிவித்தார்.
அத்துடன் இந்திய வீட்டுத்திட்டத்தில் ஊழல் முறைகேடுகள் இருப்பதாக இந்தியாவில் வடக்கு மாகாண முதலமைச்சர் கருத்துத் தெரிவித்ததை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டி இதுவிடயம் தொடர்பில் பிரதேச செயலர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்
இதன்போது பிரதேச செயலர்கள் தெரிவிக்கும் போது இந்திய வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் தெரிவு வெளிப்படைத்தன்மையுடன் ஒளிவுமறைவின்றி இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அதேவேளை, முதலமைச்சரின் இக்கூற்றானது தமக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்றய இம் மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மாறுபட்ட முரண்பாடான கருத்துக்களை கூறியிருந்தனர்.
அத்துடன், மத்தியரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை மாகாணசபையூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியிருந்தனர்.
இதனால் மீளாய்வு கூட்டத்தின் போது வாதப் பிரதி வாதங்களும் இடம்பெற்றன.