Ad Widget

அரியாலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 62 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை!!

அரியாலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள 62 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என 62 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் பிரகாரம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரினால் இந்த சுயதனிமைப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

குறித்த பெண், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போதே கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Related Posts