இலங்கை அரசின் யோசனைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் ஆலோசனைக் குழுவிலிருந்து நான் விலகிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவரான இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல்.
இலங்கை அரசும் கூட்டமைப்பும் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டுள்ள அச்ச நிலைமைக்குள் இருந்து வெளிவராவிட்டால் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
இலங்கை அரசாங்கம் தான் விரும்பும் வேளைகளில் மாத்திரம் நாங்கள் ஆலோசனைகளை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றது போல தோன்றுகிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் நாங்கள் எங்கள் ஆலோசனைகளை வழங்க முடியுமா என்பது தெரியவில்லை. அவ்வாறு நாங்கள் செயற்பட்டால் அது நேரத்தை வீணடிக்கும் செயலாகும்.
பிரபாகரன் இறந்துவிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட அச்சத்திலிருந்து வெளிவரவேண்டும் இரு தரப்புமே இவ்வாறாகத் தாங்கள் கற்பனை செய்துகொண்டிருக்கும் அச்சத்திலிருந்து வெளியே வரவேண்டும். இல்லாவிட்டால் எதனையும் தீர்க்க முடியாது.
விடுதலைப் புலிகள் மீண்டும் புத்துயிர் பெறுவார்கள், வருவார்கள் என அரசாங்கம் கற்பனை செய்துகொண்டிருக்கும் அச்சத்திலிருந்து வெளியே வரவேண்டும். இதேபோல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான அச்சத்தை தோற்றுவித்தால், அரசாங்கத்திடமும் அச்சம் காணப்படும். அதிகாரம் பகிரப்படவேண்டும் – அதுதான் ஜனநாயகம்.
இந்தியாவும் அதையே விரும்புகின்றது. அதேவேளை நாட்டை பிளவுபடுத்தும் அல்லது குழப்ப முயலும் சக்திகளுடன் அரசு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது இலங்கை அரசின் யோசனைகள் எனக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் நான் மீண்டும் இலங்கைக்கு வரமாட்டேன். அத்துடன் ஆலோசனை குழுவிலிருந்தும் நான் விலகிவிடுவேன்.
– என்று அவர் தெரிவித்தார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.