அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை! : ஜனாதிபதி உறுதி

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என வட.மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

யாழ். இந்துக்கல்லூரியின் நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.காங்கேசன்துறை வீதியில் யாழ்.இந்துக்கல்லூரிக்கு முன்பாக அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட.மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, ஜனாதிபதியின் வருகையை எதிர்த்தும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் பல கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை பாடசாலை வளாகத்திற்குள்ளே அனுமதிக்காது வழி மறித்தனர். இருந்தும் போராட்டக்காரார்கள், வீதி ஒரு பக்கத்தில் நின்று அரசியல் கைதிகளின் வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாமென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை செய்யுமாறும், வவுனியா நீதிமன்றில் வழக்குகளை நடாத்துமாறு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாமென்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Related Posts