Ad Widget

அமிதாப்பச்சன் தேசிய கீதம் பாட ரூ 4 கோடி வாங்கினாரா? கங்குலி விளக்கம்

பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை 20 ஓவர் லீக் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதத்தை பாட பிரபல பாலிவுட் நட்சத்திரமான அமிதாப் பச்சன் பாடினார். அதேபோல்,பாகிஸ்தான் தேசிய கீதத்தை பாகிஸ்தான் பாடகர் ஷபாகத் அமானத் அலியும் பாடினர். தொடர்ந்து போட்டி முடியும் வரை சச்சின் தெண்டுல்கர், தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆகியோருடன் சேர்ந்து அமிதாப் பச்சன் விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியை ரசித்தார்.

இதற்கிடையே, தேசிய கீதத்தை பாடுவதற்காக ரூ 4 கோடி அமிதாப் பச்சன் வாங்கியதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, அமிதாப் பச்சனுக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்தனர். அவரது தேசபக்தி பற்றி கேள்வி எழுப்பிய அவர்கள், கடுமையாக வசைபாடினர்.

இந்த நிலையில், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி, அமிதாப் பச்சன் பற்றி எழுந்த சர்ச்சைகளை மறுத்துள்ளார். இது குறித்து கங்குலி கூறியதாவது:* அமிதாப்பச்சன் தனிச்சிறப்பு மிக்க நபர். நான் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நிகழ்ச்சிக்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ 30 இலட்சம் செலவு செய்யும் நபரை உங்களால், கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? விமான டிக்கெட், ஹோட்டல் பில், டிக்கெட் போன்றவற்றை தனது சொந்தசெலவில் புக்கிங் செய்து உள்ளார். கொஞ்சம் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு நான் அமிதாப் பச்சனிடம் கெஞ்சினேன். எனது நேசத்தை வெளிப்படுத்தை இதை நான் செய்கிறேன். இதில் பணம் என்ற ஒரு கேள்வியே எழவில்லை என்று என்னிடம் கூறி அமிதாப் பச்சன் மறுத்துவிட்டார்” இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பெங்கால் கிரிக்கெட் சங்கமும், அமிதாப்பச்சன் ஒரு பைசா கூட பெறவில்லை என்று தனது அறிக்கையில் விளக்கி இருந்தது.

Related Posts