Ad Widget

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்

ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனுக்காகவும், நோயால் நொடிந்தவர்களின் நல்வாழ்வுக்காகவும் இரவு, பகல் பாராமல் தொண்டாற்றிய அன்னை தெரசாவுக்கு நேற்று வாடிகன் அரண்மனையில் நடந்த விழாவில் பாப்பரசர் பிரான்சிஸ் ‘புனிதர்’ பட்டத்தை சூட்டி, அருளாசி அளித்தார்.

160904084235-teresa-tapestry-exlarge-169

1910-ம் ஆண்டு அல்பேனியாவில் பிறந்த அன்னை தெரசா, இந்தியாவை தனது இரண்டாவது தாயகமாக ஏற்றுக்கொண்டு, கொல்கத்தாவில் அறப்பணிகள் செய்தார். 1951-ம் ஆண்டு அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. தனது சமூக சேவைகளால் மக்கள் மனங்களில் அவர் இமயமாக உயர்ந்தார்.

அவருக்கு 1979-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்திய அரசு 1980-ம் ஆண்டு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி சிறப்பு செய்தது. அன்னை தெரசா, தனது 87-வது வயதில் 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் திகதி மரணம் அடைந்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் கொல்கத்தாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னை என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இன்றைக்கும் திகழ்ந்து வருபவர், அன்னை தெரசா. ஏழை எளியோருக்காக உழைப்பதையே தன் வாழ்வின் மிகப்பெரிய கடமையாகவும், இலட்சியமாகவும் கருதியவர். அன்னை தெரேசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்தார். இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் முக்திப்பேறு வழங்கினார்.

முக்திப்பேறுக்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம். புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும். இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்தார். இதை பாப்பரசர் பிரான்சிஸ், அங்கீகரித்துள்ளார்.

இரண்டாவது அற்புதத்தையும் அன்னை தெரசா செய்துள்ள நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு பாப்பரசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கினார்.

செப்டம்பர் மாதம் 4-ம் திகதி நடைபெறும் விழாவில் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என பாப்பரசர் பிரான்சிஸ் அறிவித்தார்.

அவர் புரிந்த அற்புதங்களை அங்கீகரிக்கும் விதமாக புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவை புனிதர் பட்டம் பெற்றவராக அறிவித்து சிறப்பு செய்தார்.

வாடிகன் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பேராயர்கள் மற்றும் 3 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். 13 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்காக அவர்கள் ஏற்கனவே உரோம் நகருக்கு சென்றுவிட்டனர்.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி, வாடிகன் புனித அனஸ்தசியா தேவாலயத்தில் தொடர்ச்சியாக ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலிய ஆகிய மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

இந்த விழாவையொட்டி, அன்னை தெரசா தொண்டு இல்லத்தின் பராமரிப்பில் உள்ள ஆதரவற்ற சுமார் 1500 ஏழைகளுக்கு வாடிகன் அரண்மனை வளாகத்தில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அன்னை தெரசா தொண்டு இல்லத்தை சேர்ந்த சுமார் 250 சகோதரிகள் அங்கு உணவு அருந்தியவர்களுக்கு பீட்சாக்களை பரிமாறினர்.

Related Posts