அடுத்த சில வாரங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்ததாவது;
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் அனுமதி கிடைத்தால், 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போது நாடுமுழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகின்றன. 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மேல் மாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்படுகின்றன.
தடுப்பூசி அளவுகள் தொடர்ந்து நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றன. எனவே 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த சில வாரங்களில் தடுப்பூசி வழங்கப்படும் – என்றார்.