Ad Widget

அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் உதயம்!

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார்.

அந்த கட்சியின் உறுப்பினராக செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில், கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார்.

இதனால் முதலமைச்சரின் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக அவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் மாகாண சபையில் முதல்வர் அணி முதல்வருக்கு எதிரான அணி என இரு அணிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரிந்து நின்று செயற்பட்டனர்.

இதனையடுத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த கட்சியில் அனந்தி சசிதரன் உள்ளிட்ட தமிழரசு கட்சி அதிருப்தியாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையிலேயே அனந்தி சசிதரன் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts