Ad Widget

அநாகரீகமாக நடந்துக் கொள்ள கூடாது என்பதை சுமந்திரனுக்கு புரிய வைத்தேன் என்கின்றார் மனோ!

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு என் மீது என்ன கோபமோ, ஏன் கோபமோ என்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும், மீண்டும் என்னை விமர்சனம் செய்ய அவர் முயன்று வருகின்றார்.

அவர் இவ்வாறு அநாகரீகமாக நடந்துக் கொள்ள கூடாது என்பதை புரிய வைத்தேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வட, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில், தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பான புதிய அமைச்சு பொறுப்புகள், சில மாதங்களுக்கு முன்பு தான் வழங்கப்பட்டன.

இதற்குள்ளேயே பெருந்தொகை நிதியை வட, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின், எங்கள் அமைச்சின் இணைப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க ஒதுக்கீடு செய்துள்ளேன். பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

கோரிக்கைகளுக்கு நான் அமைச்சர் என்ற முறையில் ஒப்புதல் அளித்ததும், அவை தொடர்பான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை, குறிப்பிட்ட உறுப்பினர்கள், தங்கள் மாவட்ட, பிரதேச செயலாளர்களிடமிருந்து பெற்று என் அமைச்சுக்கு அனுப்ப வேண்டும்.

பாடசாலை என்றால் வலய, மாகாண பணிப்பாளர்களிடமிருந்து பெற்று அனுப்ப வேண்டும். திட்ட மதிப்பீட்டு அறிக்கை வந்ததும் நிதி விடுவிக்கப்படும். இதுவே அரச நடைமுறை.

இது சுமந்திரனுக்கு தெரியவில்லை. இதனால், எனது அமைச்சு திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை என குறை கூறிக்கொண்டே இருந்தார்.

அவரது தலைவர் சம்பந்தன் (திருகோணமலை மாவட்டம்) உட்பட பல வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின், எங்கள் அமைச்சின் இணைப்பாளர்களின், பொதுப்பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு, மதிப்பீட்டு அறிக்கைகள் பெறப்பட்டு, நிதி அனுப்பப்பட்டு வட,கிழக்கில் பணிகள் நடைபெறுவதும் அவருக்கு தெரியவில்லை.

இங்கே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு, மாகாணசபை முரண்பாடுகள் காரணமாகவும், சில வட மாகாணசபை பாடசாலைகளின் கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளுக்கான மதிப்பீட்டு அறிக்கை இன்னமும் எம்மை வந்து சேரவில்லை. அதனால், இன்னமும் சில பாடசாலை பணிகள் ஆரம்பிக்கவில்லை.

இவை எனது அமைச்சின் குறைபாடல்ல. இவை எவரது குறைபாடுகள் என தமிழ் மக்களுக்கு புரிந்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். சொல்லொணா துன்பங்களை சந்தித்துள்ள வடகிழக்கு உடன் பிறப்புகளுக்கு என்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

அடுத்த வாரம் எனது அமைச்சின் வடகிழக்கிற்கான நிதி ஒதுக்கீடுகள், பணிகள் பற்றிய முழுமையான விபரங்களை எனது அமைச்சு வெளியிடும்” என அவர் கூறினார்.

Related Posts