2019ஆம் ஆண்டு வரும் தீபாவளிக்குள்ளாவது தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்டுகளிலும் தீபாவளிக்குள் தீர்வு வரும், வரவேண்டும் என்று சம்பந்தன் தெரித்திருந்த நிலையில் இந்த ஆண்டும் அவர் மைத்தியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
அரச தலைவர் மாளிகையில் நேற்று இடம்பெற்ற தீபாவளி தின நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவித்ததாவது
பிரிக்கப்படாத பிளவுபடாத நாட்டுக்குள் தமிழ்மக்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ்மக்கள், மொழி, கலாசாரம், பண்பாடு, பாரம்பரிய அடிப்படையில் சமவுரிமையுடன் வாழ உரித்துடையவர்கள், தந்தை செல்வாவுடைய வழிநடத்தலில் அறவழிப் பேரோாட்டத்தை நாம் முன்னெடுத்திருந்தோம், மூன்று தசாப்த காலம் போர் இடம்பெற்றது, ஆனால் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கப்பெறவில்லை, மைத்திரிபால சிறிசேனவை அரசதலைவராகக் கொண்டு வருவதற்கு தமிழ்மக்களின் பங்கு அளப்பரியது,
எனவே அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வில் அவர் முக்கிய பங்காற்ற வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படவேண்டும், மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும், தமிழ்மக்களுக்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கப்பட வேண்டும் என்று தொடரச்சியாக ஒவ்வொரு தீபாவளி தினத்திலும் நாம் வலியுறுத்துகின்றோம், ஆனால் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கடவில்லை. எனவே அடுத்த தீபாவளிக்குள் இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படவேண்டும் என்றார்.