ஏற்கனவே திருமணம் செய்து விவகாரத்துப் பெற்ற பெண்ணொருவருக்கு தன்னை கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக வல்வெட்டித்துறை, பொலிகண்டியைச் சேர்ந்த 36 வயது நபரொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த நபருக்கும் திருகோணமலையினைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த முதலாம் திகதி வல்வெட்டித்துறையில் சம்பந்தக் கலப்பு இடம்பெற்றது.
அதன்பின்னர் குறித்த பெண் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனவர் என்பது குறித்த நபருடை நண்பர்கள் மூலம் அவருக்குத் தெரியவரவே அவர் குறித்த பெண்ணைத் திருமணம் செய்யமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த நபரின் வீட்டிற்கு கடந்த 2ஆம் திகதி வந்த சிலர் அவரை அச்சுறுத்தி திருகோணமலைக்கு அழைத்துச் சென்று அங்கு, குறித்த பெண்ணுடன் பதிவுத் திருமணத்தினைச் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த நபர் நேற்று (07) வல்வெட்டித்துறைக்கு மீண்டும் வந்து வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாகவும், அந்தத் திருமணத்தினைச் செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.