Ad Widget

வடக்கு மாகாண சபையில் பெரும் அமளி!

வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விகளால் வடமாகாண சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. வடமாகாண சபை அமர்வு வியாழக்கிழமை கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது.

அதன் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேட்க என ஒரு பிரதான கேள்வியும் ஐந்து துணைக்கேள்விகளும், கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் கேட்க என 4 பிரதான கேள்விகளும் 14 துணை கேள்விகளும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவால் முன்வைக்கப்பட்டன.

அந்தக் கேள்விகளை சபையில் முன் வைக்க ஆரம்பித்த வேளை ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் சபை ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்தார்.

சபையில் ஓர் உறுப்பினர் மூன்று பிரதான கேள்வியைத் தான் கேட்க முடியும் அரை மணித்தியாலம்தான் கேள்விக்கான நேரம் ஒதுக்க முடியும். ஆனால் எதிர்கட்சி தலைவரால் 5 பிரதான கேள்விகளும் 19 துணை கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உறுப்பினர்களின் சிறப்பு உரிமையை மீறும் வகையில் கேள்விகள் புரிவவரா? அறிவாரா? போன்ற கேள்விகள் உண்டு அவை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் கேள்வி என தெரிவித்தார்.

நான் சபை ஒழுங்கு பிரச்சினைகளை எத்தனை தரம் சுட்டிக்காட்டி இருப்பேன் அதன்போதெல்லாம் அதனை ஏற்றுக் கொண்டு நடந்தீர்களா? நான் கேள்வி கேட்டபோது தான் உங்களுக்கு ஒழுங்கு பிரச்சினை வருகின்றதா? எனது கேள்வி மூலம், எங்கே உங்கள் களவுகள், குட்டுகள் அகப்பட்டு விடும் என பயப்படுகின்றீர்கள் என கடும் சீற்றமாக தெரிவித்தார்.

அத்துடன் தான் கேட்ட கேள்விகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் இந்த கேள்விகளுக்கு சபையில் உரிய முறையில் பதில் அளிக்காவிடின் ஊடகங்களிடம் அந்த ஆதாரங்களைக் கையளிப்பேன். அப்போது உங்கள் களவுகள் அகப்படும் என எச்சரிக்கை செய்யும் தொனியில் கூறினார்.

அதனால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆவேசமாக கருத்துக்களை மாறி மாறி தெரிவித்தனர். அதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. அதனை அடுத்து முதலமைச்சரிடம் எதிக்கட்சி தலைவரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதம செயலாளர் பதில் அளிப்பார் என முதலமைச்சர் எதிர்கட்சி தலைவருக்கு பதில் அளித்தார்.

அதனால் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் கோபம் கொண்டு இந்த பதிலை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, நீங்கள் மஹிந்த ஆட்சியை விட சர்வதிகாரமாக நடந்து கொள்கின்றீர்கள் எனக்கு இந்த சபையில் பதில் வேண்டும். இல்லை எனில் ஆதாரங்களை ஊடகங்களிடம் கையளிப்பேன் என எச்சரிக்கும் தொனியில் கூறினார்.

அத்துடன் இங்கே பகிரங்கமாக சவால் விடுகிறேன் ஆளும் கட்சி தவறு செய்யவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவராவது ஊடகங்களுக்கு முன்னால் விவாதம் செய்ய முன் வருவீர்களா? என சவால் விடுத்தார். இதையடுத்தும் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது.

நாங்கள் ஊடகங்களுக்காக இங்கே கதைக்க வரவில்லை . மாகாண சபைக்கு தெரிவானது மக்களுக்கு சேவை ஆற்றவே என சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்தார். அதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு தாம் பதில் அளிப்பர் என முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கூறி எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

Related Posts