பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் மூன்று நாள் பயணமாக இன்று இலங்கை வருகிறார்.
அவர் இந்தப் பயணத்தின்போது யாழ்ப்பாணத்துக்கும் சென்று தற்போதுள்ள நிலை குறித்து ஆராய்வார் என்று கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கையில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டதன் பின்னர் இவரது வருகை அமைந்துள்ளது.
இலங்கைவரும் அமைச்சர் இங்கு, அரச தரப்பை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேசுவார் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தனது பயணத்தின் ஒருபகுதியாக அவர் யாழ்ப்பாணம் சென்று அங்கு வடக்கு மாகாண முதலமைச்சரையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் தனித்தனியே சந்திப்பார் என்றும், யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரிட்டிஷ் கல்லூரிக்குச் சென்று ஆங்கில மொழி கற்கைகள் குறித்தும் அவர் ஆராய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய ஜனநாயக நம்பிக்கைகளைத் தோற்றுவிக்கும் வகையிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தருணத்தில் தான் இலங்கை செல்வது குறித்து மகிழ்வடைகின்றார் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்துள்ளார்.