Ad Widget

மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய சம்பந்தன் தலைமையில் உழைப்போம்! – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அரசியல் தீர்வு தொடர்பாக ஒருமித்து செயற்படுவோம். எல்லோருமாக சேர்ந்து மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய தலைவர் சம்பந்தன் தலைமையில் உழைப்போம் என்று தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன்.

vick-cm-vickneswaran

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர், நாம் வடக்கு மாகாணத்துக்கு தெரிவாகி 3 வருடங்களாகிறது. இந்த 3வருடங்களில் நாங்கள் கற்றுக்கொண்ட அனுபவங்கள் அதிகமானவை. மாகாண சபைக்குள்ளே ஒரு செயலைப் புரிவதற்கு மத்திய அரசாங்கம் எவ்வளவு தூரம் தடையாக இருந்து வருகிறது என்பதை நாங்கள் அனுபவங்கள் ஊடாக கண்டு கொண்டோம்.

ஆகவே மாகாணங்களுடைய அதிகாரம் என்பது பகிரப்பட முடியாததாக உருவாக்கப்பட வேண்டும் என்பதிலே நாங்கள் திடசங்கற்பமாக உள்ளோம். சம காலத்திலே கிராம இராச்சியங்கள் என்ற போர்வையில் அதிகாரத்தை மாகாணசபையிடமிருந்து பிரித்தெடுப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது.

இந்த விடயத்திலே இன்று கூடியிருந்தவர்கள் எல்லோரும் தெரிவித்தது போல அரசியல் தீர்வு தொடர்பில் ஒருமித்து செயற்படுவோம்.

நாங்கள் மக்கள் அபிப்பிராயத்தை பெறுவோம். கருத்துக்கள் கலந்தாய்வுகளை மேற்கொள்வோம். அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். தீர்வு யோசனைகளை தொகுத்து கட்சி தலைமையிடம் கையளிப்போம்.

இங்கு சம்பந்தன் அவர்கள் தீர்வு யோசனை தொடர்பில் தெளிவான விளக்கத்தை அளித்தார். ஆகவே எல்லோருமாக சேர்ந்து கட்சி தலைவர் சம்பந்தன் தலைமையில் மக்கள் விரும்புகின்ற தீர்வை அடைய உழைப்போம். என்று குறிப்பிட்டார்.

Related Posts