பளையில் பல்கலைக் கழக மாணவி தூக்கு மாட்டி தற்கொலை – முகப்புத்தகம் காரணம்

கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் இன்று காலை (ஜூன் 24, 2015) பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இந்த யுவதியின் பெயர், தொலைபேசி எண் என்பவற்றை முகப்புத்தகத்தில் பதிவிட்டு ஒரு இளைஞன் இழிவு படுத்தியதே தற்கொலைக்கான காரணமென பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் அறிந்து மாணவியின் தந்தை அந்த இளைஞனின் வீட்டுக்கு நியாயம் கேட்க சென்ற போது அந்த இளைஞனின் தந்தை தன்னை மிரட்டியனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

அந்த யுவதி மூன்று நாட்களாக தொடர்ந்து அழுது கொண்டிருந்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும் இவர் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததில் ஒரு கண்ணில் காயப்பட்டு அங்கிருந்து உயிர் தப்பி சற்றும் தளராமல் தனது கல்வியை தொடர்ந்தார் எனவும் இன்று இப்படி அநியாயமாக தனது உயிரை துறந்து விட்டார் எனவும் குடும்பத்தினர் பதறுகின்றனர்.

பல்கலை கழகத்தில் பயிலும் மாணவர்கள் இவ்வாறான முடிவுகளை அவசரமாக எடுப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இவர்கள் கற்ற கல்வி தன்னம்பிக்கையையும், தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எதிர்க்கும் மனோபலத்தையும் வழங்காதது கவலைக்குரியது. இவர்களின் முட்டாள்தனமான செயல்களால் மனமுடைந்து வருந்துவது குடும்பத்தினரே. அத்தோடு இளைஞர்கள் தொழில் நுட்பத்தை தவறான செயல்களுக்காகவே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று குற்றச்சாட்டுகள் அண்மைகாலமாக முன்வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts