தீக்காயங்களுக்கு உள்ளாகி நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, நேற்று திங்கட்கிழமை (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இணுவில் பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்கும், கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த சுதாகரன் லதுசாயினி (வயது 14) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றதால், சக மாணவிகள் கேலி செய்துள்ளனர். இதனால் மனவிரக்தியடைந்த மாணவி, கடந்த 03ஆம் திகதி இரவு தனக்குதானே தீ மூட்டிக்கொண்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், உடனடியாக அவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.