கே.கே.எஸ் கடற்பாறையில் இருந்து 158 கிலோ கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பகுதியில் பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 158 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா, கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 31.6 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை எனவும், இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடல் ரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், பாறைகளுக்கு நடுவில் பொதிகள் இருப்பதை அவதானித்து அருகில் சென்று பார்த்த போது பொதிகளுக்குள் கஞ்சா இருந்தமை தெரியவந்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட நிலையில், பாறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts