யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கூட்ட நிகழ்ச்சி நிரலில் முக்கியமான சில விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி திட்டமிட்ட வகையிலையே இந்த விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளனவா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கேள்வியெழுப்பினார்.
இக் கூட்டத்தின் பிரதான விடயங்களாகக் கருதப்படுகின்ற அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மண் அகழ்வு, இயற்கை வளங்கள் அபகரிப்பு, மீள்குடியேற்றம் என்பன இதில் உள்ளடக்கப்படவில்லை. இவ்வாறு முக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்படாதமைக்குச் சில தீய சக்திகள் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சாடினார்.
ஆகவே இத்தகைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டுமென்றும் இணைத் தலைவர்களிடம் மாவை கோரினார். இதற்குப் பதிலளித்த இணைத் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிரலில் இவை உள்ளடக்கப்படாததால் வேறு விடயங்கள் என்பதில் இவ்விடயங்களை உள்ளடக்கி அவற்றை ஆராயலாம் என்றார்.
ஆனால் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது போன்று ஒரு சில விடயங்கள் மட்டுமே நேற்றய கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஏனைய விடயங்கள் எவையும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவற்றுக்கு நேரம் போதாது என்பதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த மாதம் 26 மற்றும் 27 ஆம் ஆகிய திகதிகளில் மீண்டும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூடும் போது மேற்படி பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்படுமென்று கூட்டத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.